Tuesday, December 22, 2009

ஏழாவது அறிவு!

உங்களுக்குத் தெரிந்த ஒரு கதையை இங்கே உதாரணம் காட்ட விரும்புகிறேன்.

ஒரு கிணற்றுத்தவளை - பிறந்ததில் இருந்தே அந்த கிணற்றிலேயே வாழ்ந்து வந்தது. கடும் புயல் மழையில் ஒரு கடல் தவளை ஒரு நாள் அந்தக் கிணற்றில் வந்து சேர்ந்தது. கிணற்றுத்தவளை கேட்டது "நீ எங்கிருந்து வருகிறாய்?"
"கடலிலிருந்து"
"கடலா? அது எப்படியிருக்கும்?"
"அது ரொம்பப் பெருசு!"
"ரொம்பப் பெருசா? இந்தக் கிணற்றை விடப் பெருசா?"
"அட! இந்தக் கிணற்றையும், கடலையும் எப்படி ஒப்பிடமுடியும்? அது இதைப் போல் பல லட்சம் மடங்கு பெரிசு"
"நீ பொய் சொல்றே!, இதை விட பெரிசா வேறொன்று எப்படி இருக்க முடியும்" - கிணற்றுத்தவளை

இதே போலத்தான் நாமும், நம்மால் புரிந்து கொள்ள முடியாத விஷயத்தை - இல்லை! - இருக்க முடியாது!! என்று முடிவு கட்டி விடுகிறோம்.

கடவுள் இருக்கிறாரா? இல்லையா?
* இருக்கிறார் என்பவர்களை விட்டு விடுவோம் - அது அவர்கள் நம்பிக்கை
* இல்லை என்பவர்கள் - உண்மையிலேயே கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்று தெரியவில்லை என்பவர்களையும் விட்டுவிடுவோம் - அவர்கள் என் கட்சி
* இல்லை என்பவர்கள் - கடவுள் இல்லை என்பவர்களுக்கு மட்டும் தான் இந்த விவாதம்

அறை எண் 305-ல் கடவுள் படத்தில் பிரகாஷ்ராஜ் ஒரு இடத்தில் சொல்லுவார் - "சுவத்துல இருக்கிற பல்லிக்கு அதன் பக்கத்தில் இருக்கிற பல்ப் ஏன் எரியுது? எப்படி எரியுதுனு தெரியுமா? அல்லது விளக்கித்தான் புரியவைக்க முடியுமா?" என்று.


நான் சொல்ல வரும் விஷயமும் அதுதான். எப்படி ஐந்தறிவுள்ள ஒன்றால் ஆறறிவு படைத்த நம் செயல்களுக்கு விளக்கம் சொல்ல முடியாதோ? அதே போல் ஏழறிவு படைத்த கடவுள் செயல்களை நம்மால் கண்டு தீர்மானிக்க முடியாதல்லவா?

வரிசையாக ஊர்ந்து செல்லும் எறும்புகளை நாம் காலால் மிதித்து அழிக்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவை என்ன நினக்கும் (நினைத்தால்!) - இப்படி மனிதர்கள் என்ற இனம் ஒன்று உண்டு, நம்மால் அவர்களுக்குத் தொல்லை அதனால் நம்மை அழிக்கிறார்கள் என்று நினைக்குமா? தன் அறிவு நிலையைத் தாண்டி அவைகளால் சிந்திக்க முடியாது அல்லவா? ஆறறிவு பெற்ற ஒரு விலங்கு (மனிதன்தான்) இருக்கும் என்று அவை சிந்திக்குமா?

ஒரு எருமைக்கு எப்படியோ நம் தொலைக்காட்சி பற்றித் தெரிந்துவிட்டது என்று வைத்துக்கொள்வோம் அதை இன்னொரு எருமைக்கு புரியவைக்க முடியுமா? அது எப்படிடா லண்டன்ல நடக்கிற விளையாட்டை நம்ம ஓனரு இங்கே லைவா பார்ப்பாரு? எவ்ளோ தூரம்?னுதான வாதாடும்.

கடவுள் இருக்கலாம், நமக்கு எப்படி டெக்னாலஜியோ கடவுளுக்கும் வேறு ஒரு டெக்னாலஜி இருக்கலாம், நமக்கில்லாத ஏழாவது அறிவு பெற்றிருக்கலாம். அதை வைத்து நமக்கு விளையாட்டுக்காட்டலாம்.

ஆகவே கடவுள் இருக்கிறாரா - தெரியாது என்பதுதான் என் கட்சி. இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம் - தெரியாது.

இன்னும் சில விஷயங்கள் கடவுள் இருக்கலாம் என்பதற்கு சேகரித்துக் கொண்டிருக்கிறேன் விரைவில் அவற்றுடன்.

அன்புடன்.

Labels: , , ,